அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகதுஹு
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.
நாம் ஏன் குர்பானி கொடுக்க வேண்டும்? எதற்காக அது கொடுக்கப் படுகிறது? என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். இச்சம்பவத்தில் அல்லாஹ்வும், இப்றாஹீம் நபியும், இஸ்மாயீல் நபியும் சம்பந்தப்படுகிறார்கள். அல்லாஹ் அல் குரானிலே மேற்கண்டவாறு கூறுகின்றான்.
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது
நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.
“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
“நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”
ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகர மாக்கினோம்.
இன்னும் அவருக்காகப் பிற்காலத்த வருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.
ஸலாமுன் அலா இப்ராஹீம் (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!
இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.
“நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர். (37:100 – 111)
குர்பானிக்குரிய பிராணிகள்:
உண்பதற்கு ஆகுமான பிராணிகளிலிருந்து ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றைத்தான் குர்பானியாக கொடுக்க முடியும். ஐந்து வயது நிறைந்த ஒட்டகமும், இரண்டு வயது நிறைந்த மாடு, வெள்ளாடும், ஒரு வயது நிறைந்த அல்லது முன்பற்கள் விழுந்த செம்மறி ஆடும் குர்பானி கொடுப்பதற்குத் தகுதியானவையாகும். இதற்குக் குறைந்த வயதுள்ள பிராணிகளை குர்பானி கொடுப்பது கூடாது. ஏழு நபர்களுக்காக ஓர் ஒட்டகத்தையோ அல்லது ஓர் மாட்டையோ குர்பானி கொடுக்கலாம். ஆனால் ஓர் ஆட்டை ஒரு நபருக்காக மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும். ஏழு நபர்கள் சேர்ந்து ஒரு ஒட்டகத்தையோ அல்லது மாட்டையோ குர்பானி கொடுப்பதை விட தனி நபருக்காக ஒரு ஒட்டகம் அல்லது மாடு அல்லது ஆடு கொடுப்பது சிறந்தது.
தகுதியில்லாத பிராணிகள்:
எலும்பினுள் உள்ள ஊண் உருகிய மிக மெலிந்த அல்லது வாலோ, செவியோ அறுக்கப்பட்ட அல்லது கண்ணே இல்லாத அல்லது பார்வை இழந்த அல்லது நொண்டியான அல்லது வெளிப்படையாக சதைப்பிடிப்பைத் தடுக்கும் நோயுள்ள அல்லது கர்ப்பமான பிராணிகள் குர்பானி கொடுப்பதற்கு தகுதியில்லாதவையாகும். கொம்பில்லாத அல்லது கொம்பு முறிந்த அல்லது பற்கள் இல்லாத பிராணிகளைக் குர்பானி கொடுப்பது கூடும்.
குர்பானி கொடுக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் கொடுத்தால் அதாவது நேரம் தவறி கொடுத்தால் அல்லது குர்பானிக்கு தகுதியில்லாத பிராணிகளைக் குர்பானி கொடுத்தால் அது குர்பானி ஆகாது. அது சாதாரண தர்மமாவே ஆகும். குர்பானி கொடுப்பதாக நேர்ச்சை செய்திருந்தால் துல்ஹஜ் பிறை 13வது நாள் சூரியன் மறைந்த பின்பும் அதை 'களா' என்ற அமைப்பில் குர்பானி கொடுப்பது கடமையாகும்.
குர்பானி கொடுப்பவரின் சட்டம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்கள் வந்து, உங்களில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்கு எண்ணினால், அவர் தமது தலைமுடியிலிருந்தும் மேனியிலிருந்தும் (நகம், ரோமம் ஆகிய) எதையும் வெட்ட வேண்டாம். இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், ‘இது நபி (ஸல்) அவர்கள் கூறியதன்று எனச் சிலர் கூறுகிறார்களே!’ என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘இது நபி (ஸல்) அவர்கள் கூறியதுதான் என்று நான் அறிவிக்கிறேன்’ என்றார்கள். (முஸ்லிம் 3997)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தம்மிடம் குர்பானிப் பிராணி உள்ள ஒருவர், குர்பானி கொடுக்க விரும்பியுள்ளபோது, (துல் ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் ஆரம்பித்து விட்டால், அவர் முடியையோ நகங்களையோ களைய வேண்டாம். (முஸ்லிம் 3998 )
எனவே குர்பானி கொடுக்க நினைத்தவர்கள், துல்ஹஜ் தலை பிரையை கண்டதிலிருந்து தனது குர்பானியை அறுக்கும் வரைக்கும் மேனியிலுள்ள எந்த முடியையும் களைய கூடாது.
அறுக்கும் போது ஓத வேண்டியவைகளும், ஒழுக்கங்களும்
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள், கொம்புள்ள கறுப்பு வெள்ளை கலந்த இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் பெயர் (“பிஸ்மில்லாஹ்”) கூறினார்கள். தக்பீரும் (‘அல்லாஹு அக்பர்’) சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்) தார்கள். (முஸ்லிம் 3975)
மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கறுப்பில் நடக்கின்ற, கறுப்பில் படுக்கின்ற, கறுப்பில் பார்க்கின்ற (கால்கள், வயிறு, கண் ஆகிய பகுதிகள் கறுப்பு நிறத்தில் அமைந்த) கொம்புள்ள செம்மறியாட்டுக்கடா ஒன்றைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே குர்பானிக்காக அது கொண்டுவரப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “ஆயிஷா! அந்தக் கத்தி யை எடு’ என்றார்கள். பிறகு “அதை ஒரு கல்லில் நன்றாகத் தீட்டு’ என் றார்கள். அவ்வாறே நான் செய்தேன்.
பிறகு அந்தக் கத்தியை வாங்கி, அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து, சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) ‘பிஸ்மில்லாஹ். அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்ம தின் வ ஆலி முஹம்மதின் வமின் உம்மத்தி முஹம்மதின்’ (அல்லாஹ்வின் பெயரால்! இறைவா! முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக் கொள்வாயாக!)’ என்று கூறி, அதை அறுத்தார்கள். (முஸ்லிம் 3977)
மேலும் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்) ‘அல்லாஹ்வின் தூதரே! (ஒட்டகங்களை அறுக்கக் கத்திகளைப் பயன்படுத்திவிட்டால்) நாளை (கூரிய) கத்திகள் இல்லாத நிலையில் நாங்கள் எதிரிகளைச் சந்திக்க நேரிடுமே?’ என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பிராணி சாவதற்கு முன்பாகக் கூர்மையான ஏதேனும் ஒரு பொருளால்) “விரைவாக அறுத்துவிடுங்கள்” அல்லது ‘உயிரிழக்கச் செய்துவிடுங்கள்’. இரத்தத்தை வழிந்தோடச் செய்யும் எதைக் கொண்டும் அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டால், அதை நீங்கள் உண்ணலாம். பல்லாலும் நகத்தாலும் (அறுத்தல்) கூடாது. (இந்த இரண்டாலும் ஏன் அறுக்கலாகாது என்பதற்கான காரணத்தை) நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். பற்களோ எலும்பு இனமாகும். நகங்களோ (இறைமறுப்பாளர்களான) அபிசீனியர்களின் கத்திகளாகும்’ என்று கூறினார்கள்.
(அந்தப் போரில்) எங்களுக்குச் சில ஒட்டகங்களும் ஆடுகளும் போர்ச் செல்வமாகக் கிடைத்தன. அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடி விட்டது. உடனே (நபித்தோழர்களில்) ஒருவர் அந்த ஒட்டகத்தைக் குறி வைத்து அம்பெய்து, அதை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே, இந்தப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம் பெய்து நிற்கச்) செய்யுங்கள்’ என்று கூறினார்கள். (முஸ்லிம் 3978)
எனவே பிராணியை அறுக்கும் போது பிஸ்மி சொல்லி, தக்பீர் சொல்லி, கூர்மையான கத்தியால் அறுக்க வேண்டும். குர்பான் பிராணியை அறுத்து முடிந்தவுடன் அந்த இடத்தில் யா அல்லாஹ் இதை எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக என்று பிராத்தனை செய்யலாம். சாப்பிடுவதற்காக அறுத்தாலும் அந்த பிராணிக்கு எந்த வதையும் கொடுக்காமல் மிகவும் இலகுவான முறையில் அறுக்க வேண்டும். மேலும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லி அறுக்கபடும் எந்த பிராணியையும் சாப்பிடக் கூடாது, என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் காணலாம். ‘ அபுத்துஃபைல் ஆமிர் பின் வாஸிலா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடம் இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘உங்களிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசிய மாக என்ன கூறி வந்தார்கள்?’ என்று கேட்டார். இதைக் கேட்டு அலீ (ரலி) அவர்கள் கோபமுற்றார்கள். மேலும், ‘நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் மூடி மறைக்கும் விதமாக எதையும் என்னிடம் இரகசியமாகக் கூறவில்லை. எனினும், நான்கு செய்திகளை என்னிடம் கூறினார்கள்’ என்றார்கள். நான், ‘அவை யாவை, இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே?’ என்று கேட்டேன்.
அலீ (ரலி) அவர்கள், ‘தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணிகளை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதிய விஷயங்களை (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவ னுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் (எல்லைக்கல், மைல் கல், வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து பிறர் நிலத்தை அபகரி)ப்ப வனை அல்லாஹ் சபிக்கின்றான்’ என்று கூறினார்கள். (முஸ்லிம் 4001)
கூட்டு குர்பான்
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிக் கொண்டு புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு பலிப்பிராணியில் ஏழு பேர் வீதம் ஒட்டகத்திலும் மாட்டிலும் கூட்டுச் சேர்ந்துகொள்ளுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். (முஸ்லிம் 2538)
மேலும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழுபேருக்காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறுத்துப் பலியிட்டோம். (முஸ்லிம் 2537)
எனவே வசதியுள்ளவர்கள் தனியாக மாட்டை குர்பான் கொடுக்கலாம் அதே நேரம் ஓரளவிற்கு வசதியுள்ளவர்கள் பிறருடன் சேர்ந்து குர்பான் கொடுப்பதையும் நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
குர்பானி இறைச்சியை பங்கு வைத்தல்
குர்பானி இறைச்சியை மூன்றாக பங்கு வைக்க வேண்டும் என்பது நபி வழியல்ல. தனக்கு ஓரளவிற்கு தேவையானதை எடுத்துக் கொண்டு மற்ற இறைச்சியை உறவுகளுக்கும், ஏழைகளுக்கும் பங்கு வைக்க வேண்டும்.
எத்தனை நாட்கள் குர்பானி கொடுப்பது
ஹஜ் பெருநாளன்றும், அதை தொடர்ந்து வரக்கூடிய (அய்யாமுஸ் தஸ்ரிக்) மூன்று நாட்களும் குர்பான் கொடுக்க முடியும். அதாவது குர்பான் கொடுக்கும் நாட்கள் மொத்தம் நான்காகும்.
கூலி கொடுத்தல்
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய பலி ஒட்டகங்களை (அறுத்துப் பலியிடும் பொறுப்பை)க் கவனிக்க என்னை நியமித்தார்கள். மேலும், அவற்றின் இறைச்சி, தோல் மற்றும் சேணம் ஆகிய அனைத்தையும் தர்மம் செய்யுமாறும், அவற்றில் எதையும் உரிப்பவருக்கான கூலியாகக் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். உரிப்பவருக்குரிய கூலியை நாமே கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 2535)
குறிப்பு: உழ்ஹிய்யா கொடுக்கும்போது அரச விதிமுறைகளை மீறாது நடந்துகொள்ளவது நமது கடமை. தக்பீர் அரபா தினம் சுபஹ் தொழுகை முதல் அய்யாமுத்தஷ்ரிக் கடைசிநாள் அஸர் வரை (பிறை 9 முதல் பிறை 13 வரை) தொழுகைகளின் பின்னர் தக்பீர் சொல்லவேண்டும்.